தமிழகத்தில் முதல்முறையாக; பெரம்பலூரில் அமோனைட்ஸ் அருங்காட்சியகம்: கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடத்தில், சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லுயிர்எச்சங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுவரும் ”அமோனைட்ஸ் மையத்தினை” கலெக்டர் வெங்கடபிரியா, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் எனப்படும் நத்தைபோன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள் நமது பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவு கிடைக்கின்றது. பெரம்பலுர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மோநைட்ஸ் படிமங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு வருகின்றது.

தலைக்காலி எனும் வகையினை சேர்ந்த அம்மோநைட்ஸ்கள் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது. இந்த கடல்சார் உயிரினங்களில் படிமங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொளக்காநத்தம், பிலிமிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 112 வகையான தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கின்றது. அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அந்த உயிரினத்தின் மாதிரி தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பபெற்ற 300 வகையான தொல்லுயிர் எச்சங்கள் இங்கு கட்சிப்படுத்தப்பட உள்ளது. அமோடைஸ் குறித்து அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த மையம் பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும். பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த மையம் சிறந்த பொழுதுபோக்கு மையமாக இருக்கும்.தமிழக அளவில் அமோனைட்ஸ்களுக்கென்று பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை. விரைவில் பணிகள் முடிவடைந்து இந்த அமோனைட்ஸ் மையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வின்போது புவியியல் துறை உதவி மேலாளர் பிரசாந்த் சுந்தரேசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: