கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை

துரைப்பாக்கம்: தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நகை, பொருட்களை கமிஷனர் ரவி உரியவர்களிடம் ஒப்படைத்தார். தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தை, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். இந்த ஆணையரக பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள், விலையுயர்ந்த செல்போன், பணம், பைக் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, சோழிங்கநல்லூரில்  நேற்று நடந்தது. இதில், தாம்பரம் கமிஷனர் ரவி கலந்துகொண்டு, மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை புறநகர் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்க தாம்பரம் மாநகர ஆணையரகம் உருவாக்கப்பட்டது. இங்கு, கடந்த 5 மாதங்களில் 402 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இங்கு,  23 கொலைகள் நடந்துள்ளது. அதுதொடர்பாக 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்தவித குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம் என நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை 750 பேர் எழுதி கொடுத்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் 150 கிலோ கஞ்சா, 2617 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த 10 சிகப்பு வாகனங்கள் தரப்பட்டு உள்ளன. மேலும் 26 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படும். மயிலாப்பூரில் ஆடிட்டர் தம்பதி கொலை நடந்தது போல் வேறு எங்கும் நடைபெறாமல் இருக்க முதியோர்கள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளோம். ரயில், பஸ், ஆட்டோ நிறுத்தங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர் வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் காமினி, துணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் சுப்புலஷ்மி, போக்குவரத்து துணை ஆணையர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* நில மோசடி குறித்து தினசரி 20 புகார்கள்

ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் நில மோசடி புகார்கள் நிறைய வருகின்றன. நில அபகரிப்பு சம்பந்தமாக சென்னை காவல் ஆணையரகத்தில் இருந்து 489 வழக்குகளும், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து 60 வழக்குகளும் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மொத்தம் 550 வழக்குகள் மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளது. நில அபகரிப்பு சம்பந்தமாக தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு தினசரி 20 புகார்கள் வருகிறது. இவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ரவி தெரிவித்தார்.

Related Stories: