காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கும் பொருட்டும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் சுமார் 3.5 லட்சம் மதிப்பில் புற காவல் நிலையம் கட்டிடம், ரூ.15 லட்சம் மதிப்பில் 51 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் காஞ்சி சரக காவல்துறை துணை தலைவர் எம் சத்யபிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர்.