வேலூர்: வேலூரில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்களுக்கான பயிற்சி மையத்தில் கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை ஜெயிலர்கள் ஆகிய பதவிகளுக்கு நடந்த பயிற்சி நிறைவு விழா வேலூர் சிறை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று நடந்தது. ஆப்கா இயக்குநர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தெலங்கானா மாநில சிறைத்துறை இயக்குநர் ஜிதேந்தர் கலந்து கொண்டு, பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். இதில், டெல்லியைச் சேர்ந்த மாநில சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுர்பி ஹோடாவுக்கு சிறந்த அணிவகுப்பு பிரிவில் பதக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார். ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்படாதால் அவர் பதக்கத்தை வாங்க மறுத்துள்ளார். இதனால் தெலங்கானா மாநில சிறைத்துறை இயக்குநர் ஜிதேந்தர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘‘அணிவகுப்புக்கு தலைமை தாங்க அந்த பெண் அதிகாரி தேர்வு செய்யப்படவில்லை என்பதால் பதக்கம் வாங்க மறுத்துவிட்டார். மேலும் அவர் ஒன்றிய அரசின் சுங்கத்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்’’ என்றனர்.