மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. 70வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, வாங்கடே மைதானத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டம் சம்பிரதாயமான ஒன்றாகவே அமைந்துள்ளது. பஞ்சாப், ஐதராபாத் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் 7வது, 8வது இடங்களில் இருக்கின்றன. கவுரவமான இடத்தை பிடிக்க இரு அணிகளும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.