உக்ரைன் - லடாக்கில் என்ன நடக்கிறது? : லண்டன் மாநாட்டில் ராகுல் குற்றச்சாட்டு

லண்டன்: உக்ரைனில் என்ன நடக்கிறது? லடாக்கில் என்ன நடக்கிறது? என்பது குறித்து லண்டனில் நடந்த மாநாட்டில் ராகுல்காந்தி பேசினார். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லண்டனில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ரஷ்யா - உக்ரைன் போரை போன்றது, இந்தியா - சீனாவுக்கும் இடையிலான போர்; உக்ரைனில் என்ன நடக்கிறது? லடாக்கில் என்ன நடக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உக்ரைன் மண்ணைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல் சீனாவும் இந்திய மண்ணை கைப்பற்ற முயற்சிக்கிறது. இந்திய அரசு, இந்தப் பிரச்னையைப் பற்றி பேச விரும்பவில்லை. எந்த குழப்பமும் அங்கு நடக்கவில்லை என்கின்றனர்.

இந்திய மண்ணில் சீனா அமர்ந்திருக்கிறது; உக்ரைனிலும் அதுபோல் நடக்கிறது. இந்த சிக்கலான சூழ்நிலையை இந்தியா சமாளிக்க வேண்டும். மேலோட்டமாக சிந்திப்பதால் எதுவும் நடக்காது. இந்தியாவில் ஆளும் அரசால், ஒவ்வொரு நிறுவனமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தாக்கப்படுகிறது. ஆளும் பாஜகவும், அதன் சங்பரிவார் அமைப்புகளும் இந்தியாவை புவியியல் அமைப்பாக பார்க்கின்றன; ஆனால் காங்கிரஸ் கட்சி இந்தியாவானது மக்களால் ஆனது என்று கருதுகிறது. மோடி அரசில் மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. சிறு தொழில்கள் அனைத்தும் பாஜக அரசால் தாக்கப்பட்டுள்ளன.  அது, பணமதிப்பிழப்பு அல்லது ஜிஎஸ்டி அல்லது விவசாயிகள் சட்டமாக இருக்கலாம்’ என்றார்.

Related Stories: