புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே மதியநல்லூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூரில் முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக வாடிவாசல், பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் மேடைகள் அமைக்கும் பணி நடந்தது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்த காளைகளை கால்நடை மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.