அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் அருகே நடந்த கோயில் திருவிழாவில் 500 கிடாய்கள் வெட்டி கமகம விருந்து வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தை அடுத்த வெள்ளக்கல்லில் உள்ளது கழுங்கடி ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோயில். இக்கோயில் திருவிழா இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும். இந்தாண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமிக்கு உயிர் பலி கொடுக்கும் நிகழ்வு நேற்று இரவு 8 மணி அளவில் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட கிடாய்கள் சுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டு அசைவு உணவு தயாரிக்கப்பட்டது. நேற்று காலை கழுங்கடி ஸ்ரீ முனியாண்டிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதன்பின் நேற்று காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை கமகம கறி விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அசைவ உணவை ருசித்தனர். ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.