வாடகை வீட்டை தொழிற்சாலையாக மாற்றினர் ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் வாலிபர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்

ஓமலூர், மே 21: சேலம் அருகே, போலீசாரின் வாகன சோதனையின் போது, கைத்துப்பாக்கியுடன் 2 பட்டதாரி வாலிபர்கள் பிடிபட்டனர். நண்பர்களான இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள புளியம்பட்டி பகுதியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் டூவீலரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்களிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அவர்களிடம் 2 கைத்துப்பாக்கிகள் இருந்தது.

மேலும், பெட்ரோல், கத்தி மற்றும் முகமூடி ஆகியவையும் இருந்ததால் அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும், சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி(24), சேலம் செவ் வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய்பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. நண்பர்களான இருவரும் சேலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். பின்னர், நவீன் சக்கரவர்த்தி பி.சி.ஏ இறுதியாண்டு படிப்பை முடிக்காமல், ஓசூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை ெசய்து வந்துள்ளார். அதே போல், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள சஞ்சய் பிரகாஷ், ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த இருவரும், சேலம் செட்டிச்சாவடி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். யூடியூப் பார்த்து, துப்பாக்கி தயாரிக்க ஆசைப்பட்ட இவர்கள், அதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி, துப்பாக்கி செய்யத்துவங்கியுள்ளனர். அதன்படி, ஒரு கைத்துப்பாக்கியை தயாரித்துள்ளனர். அதனை தொடர்ந்து பெரிய அளவிலான துப்பாக்கியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அவர்கள் தயாரித்த துப்பாக்கியுடன் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, இருவரையும், அவர்கள் வசித்து வரும் வாடகை வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்ற போது, அங்கு ஒரு சிறு தொழிற்சாலை போல், துப்பாக்கி தயாரிக்கத் தேவையான உபகரணங்கள் குவியலாக இருந்தது தெரியவந்தது. போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், இருவரும் இணைந்து இயற்கையை பாதுகாக்க, ஒரு அமைப்பு போல செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், வீட்டில் துப்பாக்கி தயாரிக்க வைத்திருந்த உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

இருவரும் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக துப்பாக்கி தயாரித்தார்களா அல்லது ஏதாவது சமூக விரோத அமைப்புடன் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் கைது செய்த போலீசார்,  ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: