வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் முதியவரிடம் ரூ1.30 லட்சம் அபேஸ்: போலீசார் மீட்டனர்

வேளச்சேரி, மே 21: வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரை சேர்ந்தவர் காந்த் மூர்த்தி (60). கடந்த சில வாரங்களுக்கு முன் இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு, அவரது நண்பரின் எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில்,  மருத்துவ செலவிற்காக அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே, உடனடியாக  இதில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கில் ரூ1.30 லட்சம் செலுத்த வேண்டும். சில நாட்களில் திருப்பி கொடுத்து விடுகிறேன்,’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இதைப்பார்த்த அவர், உடனே தனது நண்பருக்கு ஏதோ ஆபத்து என நினைத்து, அந்த வங்கி கணக்கில் ரூ1.30 லட்சம் செலுத்தி உள்ளார்.

சில தினங்கள் கழித்து, அந்த நண்பரை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘உடல் நலம் எப்படி உள்ளது. நான் அனுப்பிய பணம் கிடைத்ததா,’’ என காந்த் மூர்த்தி கேட்டுள்ளார்.  அதற்கு அவர், ‘‘நான் நன்றாக உள்ளேன். உன்னிடம் பணம் எதுவும் நான் கேட்கவில்லையே,’’  என்றார்.  அதிர்ச்சியடைந்த காந்த் மூர்த்தி இதுகுறித்து அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார்   விசாரணை நடத்தி, குறிப்பிட்ட அந்த வங்கி கணக்கை முடக்கினர். பின்னர், அதிலிருந்த ரூ1.17 லட்சத்தை மீட்டு காந்த் மூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: