நடுரோட்டில் பைனான்சியர் வெட்டி கொலை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலால் பரபரப்பு

சென்னை: சென்னை சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், கடந்த 18ம் தேதி, தனது நண்பர் ரமேசுடன், ஷெனாய் நகர் அருகே பைக்கில் சென்றபோது, 3 பைக்குகளில் வந்த 6 பேர், ஆறுமுகத்தை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து வந்த அமைந்தகரை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தொழில் போட்டி காரணமாக எதிர்தரப்பினர் இவரை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

பின்னர், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சந்திரசேகர் (28) தலைமையிலான 6 பேர் ஆறுமுகத்தை கொன்றது தெரியவந்தது.

முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சந்திரசேகர் கடந்த 2018 மற்றும் 2021ம் ஆண்டில் ஆறுமுகத்தை கொலை செய்ய முயன்றதும், இவர் மீது 2 கொலை, 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. இதையடுத்து 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் மற்றும் அவனது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த ரவுடி ரோஹித்ராஜ் (25) ஆகியோர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த இருவரை காவலில் எடுத்து விசாரிக்க அமைந்தகரை போலீசார் முடிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில், பைனான்சியரை கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக  வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Related Stories: