தமிழகத்தில் மழை நீடிப்பதால் கத்திரி வெயில் பாதிப்பு குறைந்தது

சென்னை: கத்திரி வெயில் முடிய இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் பெரும்பாலான  மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் வெப்பம் தணிந்துள்ளது. இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம்  தொடங்குவதற்கு முன்னதாகவே ஏப்ரல் மாதம் 23ம் தேதியே சென்னையில் 38 டிகிரி  செல்சியசை வெயில் தொட்டுவிட்டது. அதற்கு பிறகு மார்ச் மாதத்திலும் வெயிலின்  தாக்கம் அதிகமாகவே இருந்தது. அதனால் இந்த  ஆண்டு மே மாதம் வெயில் கடுமையாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏப்ரல்  மாதம் வெயிலின் தாக்கம் இருந்தது.

அதாவது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தில் மே மாத முதல் வாரத்தில் சென்னை, திருத்தணி,  தஞ்சாவூர் பகுதிகளில் 108 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெயில் எகிறியது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியாலும், மே 6ம் தேதி மழை பெய்ய தொடங்கியது. இந்த ஆண்டும் கத்திரி வெயில் காலம்  தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், வெப்ப சலனம் காரணமாக இடையிடையே மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, வங்கக் கடலில் இரண்டு முறை புயல் சின்னம் உருவாகி வெப்ப காற்றை குறைத்து தமிழகத்தில் மழை பெய்யக் காரணமாக அமைந்தன.

அது இன்னும் நீடித்து பரவலாக தமிழகத்தில் இடி  மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிவிப்பின்படி, மியான்மர் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக வட மேற்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் மே 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், தெற்கு அரபிக் கடல், மாலத்தீவின் தெற்கு பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதி, வட மேற்கு பகுதிகளில் தென் மேற்கு பருவமழை  தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாவும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. இந்த  தரவுகளின் அடிப்படையின்படி பார்க்கும் போது அரபிக்  கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு  வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் ஆகியவற்றின் காரணமாக  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்வது உறுதியாகியுள்ளது.

அதனால், கத்திரி வெயில் காலம் முடிய உள்ள 29ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த மே மாதம் வெப்ப அலை பெரும்பாலும் வீசவில்லை. வெப்ப நிலையும் அதிகரிக்காமல் அடக்கி  வாசித்தது நமக்கு பெரும் ஆறுதலாக உள்ளது.

Related Stories: