முறைகேடாக நியமனம் அமைச்சர் மகள் வேலை பறிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க கல்வித்துறை இணை அமைச்சராக இருப்பவர் பரேஷ் சந்திர அதிகாரி. இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் தனது மகள் அங்கிதாவை  முறைகேடாக ஆசிரியராக நியமித்தார். இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘ஆசிரியர் பணி தேர்வில் அங்கிதாவை விட நான் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கூட, எனக்கு வேலை வழங்கவில்லை,’ என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி அவிஜித் கங்கோபாத்யாய முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், ‘அமைச்சரின் மகள் நியமனத்தில் முறைகேடு நடந்தது உறுதியாகி உள்ளது. எனவே, அவரை  பணியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், இதுவரையில் அவர் பெற்ற சம்பளத்தையும் அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார். ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேட்டை சிபிஐ.யும் விசாரித்து வருகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு  பரேஷுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அவர்  ஆஜராகவில்லை. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று காலை அவர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

Related Stories: