2 ஆண்டுக்குப்பின் கோலாகலம்: ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் துவக்கி வைத்தார்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். நீலகிரி  மாவட்டத்திற்கு கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா  பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில்,  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி  நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மலர் கண்காட்சி இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 124வது மலர் கண்காட்சி நேற்று ஊட்டி  தாவரவியல் பூங்காவில் துவங்கியது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர் பூங்காவில்  வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்களை பார்வையிட்டார். பூங்கா மாடங்களில் டுலீப், சிம்பிடியம், புரோட்டியா, கேலா லில்லியம் மற்றும் மேரிகோல்டு  உள்ளிட்ட 275 வகை ரகங்கள் அடங்கிய வண்ண மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. காட்சி மாடத்திலுள்ள கொய்மலர்கள் அரங்கினையும், ஹெலிகோனியா மலர்  அலங்காரங்களையும்,

ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலீப்  மலர் செடிகளையும், சுமார் 52 வகையான மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்ட மலர் மாடங்களையும், காய்கறிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்,  காட்டுமாடு உள்ளிட்ட பிற அலங்காரங்களையும் முதல்வர் பார்வையிட்டார். குழந்தைகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும்  வகையில் சுமார் 4 ஆயிரத்து 500 தொட்டிச் செடிகளின் மூலம் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி மாளிகையினையும், நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களான தோடர், இருளர், குரும்பர், பணியர்,

கோத்தர் மற்றும் காட்டு நாயக்கர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தினையும் அவர் பார்வையிட்டார். தமிழ் மறவன் பட்டாம்பூச்சி, ஆந்தை, சுமார் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு பிரமாண்டமாக மலர் அலங்காரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்

கட்டிடம், உதகை 200ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை நினைவு  கூறும் விதமாக “ஊட்டி 200” என்று மலர்களால் பிரமாண்டமாக  வடிவமைக்கப்பட்டுள்ளதையும், மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள “மீண்டும் மஞ்சப்பை” அலங்காரத்தையும், சுற்றுச்சூழல் துறையின் சார்பில்  பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக “மீண்டும் மஞ்சப்பை” பயன்பாடு குறித்து அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அரங்கு மற்றும் தனியார் அரங்குகளையும்  பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை வேளாண்மை காட்சி திடல் மற்றும் தமிழ்நாட்டின் தோட்டக்கலை வளத்தை குறிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத் துறையின் காட்சித் திடல்களை பார்வையிட்டார்.

பின்னர், தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவை சுற்றி பார்த்தார். தொடர்ந்து மலர் கண்காட்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழங்குடியினர் பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி. ராசா, கணேஷ் எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் அம்ரித், தோட்டக்கலை மற்றும்  மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி, உள்ளாட்சி அமைப்புகளின்  பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: