பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இன்று முதல் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 2021 வடகிழக்கு பருவமழை காலத்தில் கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை கடைகள் மூலம் 27.11.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1100 மெட்ரிக் டன் அளவிற்கும் ரூ.4 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்திவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக 19ம் தேதி நேற்று 4 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை இன்று முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, மக்கள் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தரமான தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவான விலையில் வாங்கி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: