இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை திரும்பினர்

மீனம்பாக்கம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கடந்த மார்ச் 3ம் தேதி அதிகாலையில் ராமேஸ்வரம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களது படகு, வலைகள் மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அந்த 12 மீனவர்களின் குடும்பத்தினர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

உடனே பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். மேலும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேசினார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. பின்னர் அவர்கள், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, 12 மீனவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை, தனிமைப்படுத்துதல் நடந்து முடிந்தன.

பின்னர், 12 மீனவர்களுக்கும் அவசரகால பாஸ்போர்ட், விசாவுக்கு ஏற்பாடு செய்து, இன்று அதிகாலை 4.15 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். குடியுரிமை அதிகாரிகளின் விசாரணை முடித்து, காலை 7 மணியளவில் வெளியே வந்தனர். அவர்களை தமிழக மீன்வள துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்திருந்த மீன்வளத்துறை அதிகாரிகள், 12 மீனவர்களையும் வேனில் அழைத்து சென்றனர்.

Related Stories: