ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிக்கு நிவாரணம் தரமுடியாது: நீதிபதிகள் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீட்டு மனு, மேலும் அதுவரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு ஆகிய அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பான இடைக்கால மனுவை உடனடியாக விசாரித்து, அவசர நிவாரணங்களை வழங்க வேண்டும். அப்போதுதான் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு விவகாரத்தில் இடைக்கால மனுமீது எவ்வித நிவாரணமும் தற்போது வழங்க முடியாது. அதேபோல் ஆலை தொடர்பான விஷயத்தில் தற்போதைய நிலையே தொடரும் என உத்தரவிட்டனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான இடைக்கால மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறி, வழக்கு விசாரணையை வரும் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: