திருமயம் அரசு மருத்துவமனைக்கு மனைவியை கடித்த பாம்புடன் வந்த கணவரால் பரபரப்பு

திருமயம் : திருமயம் அருகே மனைவியை கடித்த பாம்புடன் வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலதுருவாசகபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி பொன்னழகு என்ற அழகு (33). இவர் தனது வீட்டு அருகே விறகு அடுக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விறகுக்குள் இருந்த பாம்பு அழகுவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாம்பு கடித்ததை அறிந்த அழகு அலறியடித்துக்கொண்டு வீட்டில் இருந்த கணவரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாண்டியன் மனைவியை கடித்த பாம்பை உயிருடன் சாக்குப்பையில் பிடித்து மனைவி அழகுவையும் அழைத்துக்கொண்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.பின்னர் பாம்பை மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து திருமயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அழகுவை கடித்தது மலைப்பாம்பு என வனத்துறையினர் தெரிவித்து பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இதனிடையே மருத்துவர்கள் பாம்பு கடித்த அழகுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த கணவரால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: