நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!!

கொழும்பு: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். மாதத்திற்கும் மேல் மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. கடந்த 9ம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது. தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். 4வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார். இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி காலேவில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அதன்படி, துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத்துறை அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா பதவியேற்றுள்ளார்.  கல்வித்துறை அமைச்சராக சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல-வும் பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து விஜேதாச ராஜபக்சே நீதித்துறை அமைச்சராகவும், ஹரீன் பெர்ணாண்டோ சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ரமேஷ் பத்திரண, மனுஷ நாணயக்கார, நவீன் பெர்ணாண்டோ, டிரான் அலஸ் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே சில நாட்களுக்கு முன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே 4 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது மேலும் 9 பேர் பதவியேற்றுள்ளனர்.

Related Stories: