நெமிலியில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டு, ஏணியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்-கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை

நெமிலி : நெமிலி பகுதிகளில் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டு மற்றும் ஏணியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் போதிய இடம் இல்லாததால் மாணவ, மாணவிகள் பஸ்சின் படிக்கட்டு மற்றும் பின்புறத்தில் உள்ள ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

குறிப்பாக, நெமிலியில் இருந்து காஞ்சிபுரம், பாணாவரம் செல்லும் பஸ்கள், அரக்கோணத்தில் இருந்து நெமிலி வழியாக வேலூர் செல்லும் பஸ், பனப்பாக்கத்தில் இருந்து திருமால்பூர் செல்லும் பஸ் ஆகியவற்றில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியர்களால் கூட்ட நெரிசல் அதிகரித்து, படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. சில இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் நன்மை கருதி இந்த வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: