அணைக்கட்டு தாலுகாவில் 2ம் நாள் ஜமாபந்தியில் உதவி கேட்டு 140 பேர் மனு-உடனடி தீர்வு காண உத்தரவு

அணைக்கட்டு : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தியின் இரண்டாம் நாளான நேற்று ஊசூர் உள்வட்டத்திற்குட்ட ஊசூர், பூதூர், சேக்கனூர், தெள்ளூர், புலிமேடு, அத்தியூர், குப்பம், முருக்கேரி, செம்பேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தீர்வாய மேலாளர் பாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி, மண்டல துணை தாசில்தார்கள் திருக்குமரேசன், மெர்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாசில்தார் விநாயகமூர்த்தி வரவேற்றார். இதில் அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘அத்தியூர் ஊராட்சியை சேர்ந்த நாங்கள் பூதூர் எல்லையில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். வீட்டு மனைபட்டா இல்லாததால் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. சிறப்பு மனுநீதி நாளில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தற்போது அங்கு வீடு கட்டி வசித்து வரும் 53 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்ற அலுவலர் ராமகிருஷ்ணன் இடத்தின் வகைபாடு குறித்து விசாரனை நடத்தி உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தாசில்தார், சர்வேயர்களுக்கு உத்தரவிட்டார். இதேபோல் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட பல நல திட்ட உதவிகள் கேட்டு 140 பேர் மனு அளித்தனர்.  இதில் வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த், விஏஓக்கள் சங்கர்தயாளன், தமிழ், அசோக், அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: