செண்பகத்தோப்பு அணை திறப்பு வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றம்-கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் கொள்ளளவை எட்டியதால் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இது குறித்து, நீர்வளத்துறை போளூர்-மத்திய பெண்ணையாறு வடிநில பாசனபிரிவு உதவி பொறியாளர் செல்வராஜீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம். கலசபாக்கம் தொகுதி, செண்பகத்தோப்பு கிராமத்தில் கமண்டலாற்றின் குறுக்கே செண்பகத்தோப்பு அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள 48 ஏரிகளின் வாயிலாக சுமார் 7497 ஏக்கர் நிலங்கள் பாசனப்பயன்பெறுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் மொத்த உயரம் 62 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 287.20 மில்லி கன அடியாகும்.

தற்போது பெய்துவரும் மழையினால் செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயரும் போது அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிக்காட்டுதலின்படி அணைக்கு வரும் நீர்வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும்.

தற்போது 18ம் தேதி நிலவரப்படி, 54 கன அடியாக உள்ளதால் செண்பகத்தோப்பு அணையிலிருந்து உபரிநீர் 18ம் தேதி காலை 11.00 மணி முதல் வினாடிக்கு 1000 கனஅடி திறக்கப்படுகிறது. நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர்வெளியேற்றம் அதிகரிக்கப்படும்.

எனவே, செண்பகத்தோப்பு அணையின் உபரி நீர் செல்லும் கமண்டல ஆற்றின் கரையோர கிராமங்களான படவேடு. மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்தவாசல், இராமாபுரம் மற்றும் கமண்டலாறு மற்றும் கமண்டல நாகநதி ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், சந்தவாசல் ஊராட்சி தலைவர் தேசிங்கு ஆகியோர் நடவடிக்கையின்படி, நேற்று முன்தினம் முதல் தண்டோரா மூலம் கரையோர மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.

Related Stories: