×

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடலுக்கு சென்று காணாமல் போன 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு: உறவினர்கள் உற்சாகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் பகுதியில் இருந்து கடலுக்கு சென்று காணாமல் போன 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் உலகுசுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டு படகில்  குமாரராஜா, மோகனசுந்தரம், யுவராஜ், ராஜ் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நண்டு வலையை எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள், நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை.  இதனால் சந்தேகமடைந்து,  கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து விசைப்படகில் சக மீனவர்கள் தேடித் சென்றனர்.

அங்கு வலை விரித்திருந்த பகுதிகளில் தேடிப்பார்த்தும் மீனவர்கள் மற்றும் படகை காணாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் ஏமாற்றத்துடன் நேற்று இரவு கரை திரும்பினர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் கடலோர காவல்படையினர், சக மீனவர்களின் உதவியோடு 20 நாட்டுப்படகுகளில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகுடன் கடலுக்குள் தேடிச் சென்றுள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.


Tags : Pudukkotta District ,Sandalgudi , Pudukkottai, Manamelkudi, sea, fishermen
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா...