உதகையில் 124வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் : மலர் சிற்பங்களை பார்வையிட்டு ரசித்தார்!!

நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் காய்கறிகள், பழங்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கோடை சீசன் கலைக்கட்டியுள்ள நிலையில், மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கிய மலர் கண்காட்சி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் உதகை நகரம் தோன்றி 200 வருடங்கள் ஆனதை குறிக்கும் வகையில், 200 என்ற வாசகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 124வது மலர் காட்சியை முன்னிட்டு பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு கோவை வேளாண் பல்கலைக்கழக கட்டிடத்தின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், 6 பழங்குடியின மக்களின் உருவங்கள் கொய்மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: