உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!: ஒரேநாளில் 2,000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் வெளியேற்றம்..!!

கீவ்: ரஷ்யாவின் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்கிருந்து பொதுமக்கள் முழு வீச்சில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கீவ், கார்க்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள், ரஷ்ய தாக்குதலில் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன. உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கவச  வாகனங்களை அழித்திருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. தொடர்ந்து, டான்பான்ஸ் பிராந்தியத்தின் டொனெட்ஸ்க், லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்களை உக்ரைன் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி அளித்து வருவதாகவும் உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. ஆனால் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் ஏராளமான உக்ரைன் வீரர்கள் தங்களிடம் சரணடைந்து வருவதாக ரஷ்யா கூறியுள்ளது. நேற்று மட்டும் சுமார் 750க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்ததாக ரஷ்யா கூறுகிறது.

Related Stories: