நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழா

நாமக்கல்: மிகவும் பிரசித்தி பெற்ற நாமக்கல் மலைக் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி திருத்தேர் 56 லட்சத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் இன்று நடந்தது. நாமக்கல் மலையின் கிழக்குப்புறத்தில், மெயின் ரோடு பகுதியில் ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி கோயில் குடைவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இங்கு கார்கோக்கடகன் என் பாம்பின் மீது மூலவர் ரங்கநாதர் அனந்த சயன நிலையில் உள்ள சிலை மலையைக்குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பங்குனி மாதத்தில் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய முப்பெரும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.

3 தேரும் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனால் பழுதடைந்த நிலையில் இருந்த நரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில் தேர்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு நடைபெற்ற பங்குனி விழாவின் போது தேரோட்டம் நடைபெற்றது. பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த ரங்கநாதர் கோயில் தேரை, இந்து சமய அறநிலையத்துறை மூலம், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தேர் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில், 45 மரச்சிற்பக் கலைஞர்கள் புதிய தேரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டு பங்குனி தேர்த்திருவிழாவின்போது தேர் அமைக்கும் பணி நிறைவடையாததால் ரங்கநாதர் தேர் ஓடவில்லை.

தற்போது புதிய தேர் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, ரங்நகாதர் தேர் வெள்ளோட்ட விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்பி ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் துணை கமிஷனர் ரமேஷ், தக்கார் அன்னக்கொடி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பலபட்டறை மாரியம்மன் கோவில் சேந்தமங்கலம் சாலை வழியாக தேர் இழுத்து வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோஷம் முழங்க தேரை இழுத்து வந்தனர்.

Related Stories: