பிரிட்டன், ஸ்பெயினைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் குரங்கம்மை : கனடாவில் இருந்து திரும்பியவருக்கு தொற்று உறுதி!!

வாஷிங்டன்: அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரத்தைச் சேர்ந்த நபர் தனது நண்பர்களை சந்திப்பதற்காக ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சென்று மே மாத தொடக்கத்தில் அமெரிக்கா திரும்பினார். அவருக்கு தொடர் காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மிக அரியவகை வைரஸ் தொற்றான குரங்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளதால் வேறு சிலருக்கும் இந்த நோய் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனையடுத்து குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அமெரிக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளில் குரங்கு அம்மைத் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் குரங்கம்மை பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குரங்கு காய்ச்சல், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது என்று கூறும் மருத்துவ ஆய்வாளர்கள், கொறித்து உண்ணும் சிறிய வகை விலங்குகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக கூறுகின்றனர். குரங்குக் காய்ச்சல் தீவிரம் ஆகும் போது 10ல் ஒருவருக்கு மரணம் நேரிட வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.   

Related Stories: