கொருக்குப்பேட்டையில் பயங்கரம் போதை மாத்திரை விற்ற வாலிபர் வெட்டிக்கொலை: 3 பேர் போலீசில் சரண்

சென்னை: கொருக்குப்பேட்டையில் போதை மாத்திரை விற்ற வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் போலீசில் சரணடைந்தனர். கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ராகுல் (19). இவர், அதே பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 15ம் தேதி இவரை சந்தித்த 3 பேர், தங்களுக்கு போதை மாத்திரை வேண்டும் என ரூ.20 ஆயிரத்தை ராகுலிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதை மாத்திரை வாங்கி தராமல் அலைக்கழித்துள்ளார். இதனால், அந்த 3 பேரும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், பணத்தையும் திருப்பி தராமல் ராகுல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிநாராயணபுரத்துக்கு வந்து ராகுலை சந்தித்த அந்த 3 பேரும், போதை மாத்திரை அல்லது பணத்தை திருப்பி கொடு என கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த 3 பேரும், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து, ராகுலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அவரது தலை, முதுகு, கை உள்பட பல இடங்களில் பலத்த வெட்டு காயங்களுடன் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

 சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ராகுலை  மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராகுல் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

 இந்நிலையில், ராகுலை கொலை செய்ததாக கூறி, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த சங்கர் (எ) கவுரிசங்கர் (25), தண்டையார்பேட்டை, கைலாசம் தெருவை சேர்ந்த சரவணன் (20), வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரியை சேர்ந்த ரகுமான் (20) ஆகிய 3 பேரும் நேற்று ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போதை மாத்திரை வாங்கி தரும்படி ராகுலிடம் ரூ.20 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், அவர் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்ததால், ஆத்திரத்தில் வெட்டி கொன்றோம், என 3 பேரும் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து, ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: