மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி

மானூர்: மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்த வெறிநாய் கூட்டம் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியதில் 34 ஆடுகள் பலியாகின.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் சுப்பையாபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரியப்பன் (41). விவசாயியான இவர், ஊருக்கு தெற்கே கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்றிரவு 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 10 குட்டி ஆடுகள் மற்றும் நான்கைந்து கோழிகள் ஆகியவை பண்ணையில் இருந்தன.

இந்நிலையில் நள்ளிரவில் பண்ணைக்குள் புகுந்த வெறிநாய் கூட்டம் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் 34 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. அதன்பிறகு வெறிநாய் கூட்டம் அங்கிருந்து சென்று விட்டது. இன்று காலை பண்ணைக்கு வந்த மாரியப்பன், ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், மானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நாய்களால் கடித்து குதறப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.3.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: