வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் ஊராட்சி சாத்தனூரை சேர்ந்தவர் வெங்கடேசன்(55). இவர் ஆலங்குடி சந்தைவெளி பகுதியில் வீடு கட்டுவதற்காக கடந்தாண்டு இடம் வாங்கினார். அந்த இடத்தில் பில்லர்கள் அமைப்பதற்காக நேற்று மாலை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த பள்ளத்தில் 3 அடி உயர உலோக பாவை சிலை, ஒரு அடி உயர பெருமாள் சிலை, ஒரு பலிபீடம், திருவாச்சி, சிறிய அளவிலான கலயம் கிடைத்தது. இந்த கலயத்தில் ராமானுஜர் உள்ளிட்ட 9 மிகச்சிறிய அளவிலான சாமி சிலைகள் உள்ளிட்ட 24 பொருட்கள் இருந்தது. மொத்தத்தில் சாமி சிலை உட்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. 3 அடி உயர உலோக சிலையின் வலது பக்க கை உடைந்த நிலையில் காணப்பட்டது.