குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டுக்கு  18ல் இருந்து 28 சதவீதமாக ஜிஎஸ்டி வரியைஉயர்த்துவது என அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. குதிரை பந்தயம், கேளிக்கைகள் (கேசினோ) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை சிறப்பாக மதிப்பிட்டு கூடுதல் வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய கடந்தாண்டு அமைச்சர்கள் குழு ஒன்றை ஒன்றிய அரசு நியமித்தது.

மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில் தமிழக நிதியமைச்சர் உள்ளிட்ட 8 மாநிலங்களின் அமைச்சர்கள் அடங்கிய இந்த குழுவினர், இந்த குதிரை பந்தயம், கேசினோ மற்றும் ஆன்லைன் விளையாட்டு போன்ற சேவைகளை மதிப்பிட்டனர். இம்மாத தொடக்கத்தில் நடந்த இந்த குழுவின் கூட்டத்தில், மேற்படி 3 சேவைகளின் வரியை 18ல் இருந்து 28 சதவீதமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த குழுவினர் கூடி விவாதித்தனர். இதில் இந்த சேவைகளுக்கான வரியை 28 சதவீதமாக உயர்த்துவது இறுதி செய்யப்பட்டதுடன், இதற்காக இந்த சேவைகளை மதிப்பிடும் முறையையும் இறுதி செய்தது. இது தொடர்பான அறிக்கை ஓரிரு நாட்களில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்படும் என கன்ராட் சங்மா கூறியுள்ளார். இதுகுறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Related Stories: