முதல்வர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் : திருநெல்வேலி வாலிபர் கைது

சென்னை: சென்னை விமானநிலையம் மற்றும் தமிழக முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருநெல்வேலியை சேர்ந்த கஞ்சாவுக்கு அடிமையான போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல்துறை மாநில கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த செவ்வாய்கிழமை நண்பகல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான நிலையம், தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசார் சென்னை விமான நிலையம் மற்றும் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் தமிழக முதல்வர் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல் விமான நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த வெடி குண்டும் சிக்கவில்லை.

பின்னர் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில், திருநெல்வேலி மாவட்டம் சுந்தமல்லி கிராமத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன்(25) என்பவர், போதையில் விளையாட்டாக வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். தேனாம்பேட்டை போலீசார், திருநெல்வேலி போலீசார் உதவியுடன் தாமரைக்கண்ணனை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: