சென்னை : தமிழகத்தில் பணவீக்கம் 5.37% ஆக குறைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சில்லரை விற்பனை பண வீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இந்த பணவீக்கத்துக்கு மிக முக்கிய காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கூறப்படுகிறது. மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ,அரியானா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுபவை என பட்டியலிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் பிற மாநிலங்களைவிட குறைவான பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளது. 2 மாநிலங்களிலும் தேசிய சராசரியை விட குறைவாக முறையே 5.4 மற்றும் 5.1 என்ற அளவில் பணவீக்கம் பாதித்து இருக்கிறது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் - மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய #DravidianModel நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர்.இச்சாதனை தொடரும்!, எனத் தெரிவித்துள்ளார்.