சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. இந்த வகையில், காஸ் சிலிண்டருக்கான விலையை உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்த்தாமல் ஒரே நிலையில் வைத்திருந்தனர். தேர்தல் முடிந்ததும், திடீரென மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ரூ.965.50 என விலை உயர்ந்தது. இந்த விலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.