மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலைகள் இருமடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எப்போதும் 500 வாகனங்களில் இருந்து 5000 டன் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால், நேற்று காலை 400 வாகனங்களில் இருந்து 4,500 டன்னுக்கும்  குறைவான காய்கறிகளே  வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம்  ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60க்கும், பெங்களூர் தக்காளி ரூ.70க்கும், பீன்ஸ் ரூ.100க்கும், அவரைக்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, நேற்று காலை, ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.60 இருந்து 80க்கும், பெங்களூர் தக்காளி ரூ.70 இருந்து  ரூ.85க்கும், பீன்ஸ் 100க்கும், அவரைக்காய் ரூ. 50 இருந்து ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சென்னை புறநகரில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி ரூ.90க்கும், பெங்களூர் தக்காளி ரூ.100க்கும், பீன்ஸ் ரூ.130க்கும், அவரக்காய் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளை வாங்க வந்த இல்லதரசிகள் விலையை உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ் .முத்துக்குமார் பேசும்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் காய்கறிகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது. இதனால் கோயம்பேடு மார்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. எனவே, தக்காளி, பீன்ஸ், அவரக்காய் ஆகிய காய்கறிகள் இரு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு காய்கறிகளின் விலைஅதிகரித்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.

Related Stories: