முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பு சட்டத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்துள்ளார்: விமான நிலையத்தில் பேரறிவாளன் பேட்டி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 7 மணி விமானத்தில் கோவை புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை பழைய விமான நிலையத்திற்கு மாலை 5.40 மணிக்கே  வந்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், அவரின் தாயார் மற்றும் குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையத்தில் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் உடனான சந்திப்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன் கூறுகையில், ‘‘அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநில அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்துள்ளனர். அதனால்தான் தற்போது இந்த முடிவு கிடைத்துள்ளது. முதல்வர் எங்களிடம் குடும்ப பின்னணி குறித்து கேட்டறிந்தார். என்னைக் கட்டி அணைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். மற்றவர்கள் விடுதலை குறித்து அவர்கள் வரும் தீர்ப்பை வைத்து நடவடிக்கை மேற் கொள்வார்கள். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் தற்போது வெளியே வந்து உள்ளேன்’’ என்றார்.

இதையடுத்து அவரின் தாய் அற்புதம்மாள் கூறுகையில், ‘‘பேரறிவாளன் பரோலில் வெளியே வந்ததால் அவருக்கு மருத்துவ உதவிகள் சரியாக கிடைத்தது. நான் இதற்கு முன் முதல்வரை சந்தித்து பேரறிவாளன் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டார், இனி அவர் சிறைக்குச் செல்லாமல் இருக்க நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதற்கு முதல்வர் உங்களுக்கு உள்ள உணர்வு தான் எனக்கும் உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை நான் செய்கிறேன் என உறுதியளித்தார்.  விடுதலையான உடனே அவரை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தோம் எங்களை மகிழ்ச்சியாக வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்’’ என்றார்.

Related Stories: