பொது இடத்தில் தகராறு தட்டிக்கேட்ட மூதாட்டி வெட்டி படுகொலை: பிரபல ரவுடி கைது

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (எ) விக்கி(26). பிரபல ரவுடி. இவர் மீது ஆதம்பாக்கம் உள்பட பல்வேறு  காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவி வசிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விக்னேஷ் பிளஸ் 2 படிக்கும் மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். இதனால் மாணவியின் குடும்பத்தினர் விக்கியை அடித்து விரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், அங்கு சாலையில் கிடந்த கற்களை எடுத்து எதிர்வீட்டின் மீது சரமாரியாக வீசியுள்ளார்.

அப்போது, சில கற்கள் அங்குள்ள ஹேமாவதி என்பவர் வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் அவர்களும் விக்னேஷை கண்டித்துள்ளனர். இதனால் விக்னேஷ் கத்தியை எடுத்து மிரட்டியுள்ளார். இதை பார்த்ததும் ஹேமாவதியின் தாய் வெள்ளைத்தாய்(65) அங்கு வந்து இதனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் வைத்திருந்த கத்தியால் வெள்ளைத்தாய் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவருக்கு 3 இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் வெள்ளைத்தாய் மயக்கம் போட்டு விழுந்தார்.

இதை பார்த்ததும் ரவுடி விக்னேஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற வெள்ளைத்தாய் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த   ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளைத்தாயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், புகாரின்படி போலீசார் ரவுடி விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: