பிளே ஆஃப் சுற்றுக்கு மல்லுக்கட்டு கொல்கத்தா-லக்னோ அணிகள் இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்ற நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க கொல்கத்தா அணி, இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் புது வரவான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கலக்கலாக ஆடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ள லக்னோ அணி, அவற்றில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் (16 புள்ளிகள்) 3ம் இடத்தில் உள்ளது. இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன், பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.

இன்று இரவு மும்பையில் நடைபெற உள்ள போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. இரு அணிகளும் இத்தொடரில் ஏற்கனவே ஒருமுறை மோதியுள்ளன. அதில் 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி, வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, அதிரடியாக விளாசக் கூடிய ஆண்ட்ரே ரஸல் மற்றும் சாம் பில்லிங்க்ஸ் என பேட்டிங் வலுவாகவே காட்சியளிக்கிறது. ஆல் ரவுண்டர் சுனில் நரைன், வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சவுத்தி, உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி என்று பவுலர்களும் வரிசை கட்டுகின்றனர். அணியாக இணைந்து ஆடினால், லக்னோ அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

லக்னோ அணியிலும் பேட்டிங் ஆர்டர் வலுவாகவே உள்ளது. கேப்டன் கேஎல் ராகுல் இந்த தொடரில் கலக்கி வருகிறார். கூடவே குவின்டான் டி காக், மார்க்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, இளம் நட்சத்திரம் ஆயுஷ்பதோனி, குருணால் பாண்டியா என சிறப்பான பேட்டர்கள் உள்ளனர். ஜேசன் ஹோல்டர் ஆவேஷ்கான், சமீரா, பிஷ்னோய் ஆகியோரும் இத்தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். லக்னோ இப்போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். கொல்கத்தா வெற்றி பெற்றால், அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு நீடிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

Related Stories: