உலகளவில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு கோதுமை ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுங்கள்!: இந்தியாவுக்கு அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள்

நியூயார்க்: கோதுமைக்கான ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போரால் உலக நாடுகளுக்கு இடையே கோதுமை உள்ளிட்ட  தானிய வினியோக சங்கிலி பாதித்துள்ளது. இதனால் உலகளவில் கோதுமை விலை  அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக இந்தியாவில் கோதுமையின் விலை உயர்வு, பதுக்கலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 13ம் தேதி முதல் கோதுமை ஏற்றுமதிக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2021-22ம் நிதி ஆண்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்தியா 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய எண்ணி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் கண்டனம் ெதரிவித்தன.

அதையடுத்து ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற இடைக்கால ஏற்பாடாக, அவற்றுக்கு மட்டும் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில் கோதுமை ஏற்றுமதி மீது பிறப்பித்துள்ள தடையை, இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.

இதுகுறித்து உலகளாவிய உணவு பாதுகாப்பு கவனிக்கும் ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதி லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘உக்ரைன் மீதான ரஷ்ய போரால் உலகளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் உணவுப்பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்பதால் கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறோம். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா, மற்ற நாடுகளால் எழுப்பப்படும் கவலைகளை அவர்கள் (இந்தியா) கேட்கிறபோது, அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.

Related Stories: