கூடலூர்: கூடலூர் பகுதியில் நிஷாகந்தி மலர் செடிகளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அந்த செடிகளிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை பூக்கக்கூடிய நிஷாகந்தி பூக்கள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளன. தாமரையின் அளவை விட பெரிதான இந்த பூக்கள் இரவு 8 மணிக்கு மேல் மொட்டுக்கள் மலரத் துவங்கி நள்ளிரவில் முழுமையாக மலர்ந்து அதிகாலையில் வாடும் தன்மை உள்ளது. தற்போது இப்பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் பூக்கள் இரவில் பூத்து அப்பகுதிகளில் நறுமணம் வீசி வருகின்றன. சீனர்களின் அதிர்ஷ்ட பூவாக இது உள்ளதாகவும் பெரும்பான சீனர்களின் வீடுகளிலும் இதனை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.