ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் கோரிக்கை

பழநி: ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சி உள்ளது. இங்கு கொய்யா மற்றும் மா போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. ஆயக்குடியில் விளைவிக்கப்படும் கொய்யா தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை. கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆயக்குடியில் நாள்தோறும் கொய்யா சந்தை நடைபெறும். அங்கு வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஏல முறையில் கொய்யா வகைகளை போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இத்தகைய பிரசித்தி பெற்ற கொய்யாவிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாரும் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி கொய்யா விவசாயி ராமமூர்த்தி கூறியதாவது, ஆயக்குடி கொய்யாவிற்கு தனி ருசியும், சிறப்பும் உள்ளது. விற்பனைச் சந்தையில் ஆயக்குடி கொய்யாவிற்கு தனி விலையும், வாடிக்கையாளர்களும் உண்டு. பல ஆண்டுகளாக ஆயக்குடி விவசாயிகளால் கொய்யா விளைவிக்கப்பட்டாலும், சரியான விலை கிடைக்காததால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை வாழைப்பழம், திண்டுக்கல் பூட்டு, பழநி பஞ்சாமிர்தம் போன்றவைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல் ஆயக்குடி கொய்யாவிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டால் வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும், ஆயக்குடியில் பழச்சாறு தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இதனால் விவசாயிகள் வாழ்க்கை மேம்படும். இதற்காக தோட்டக்கலை கல்லூரியின் பழவியல்துறை அதிகாரிகளின் உதவியையும் நாட உள்ளோம். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: