ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை பிரபல பொருட்கள் டெலிவரி மையத்தில் ரூ.2.35 லட்சம் திருட்டு: முசிறியில் நள்ளிரவில் பரபரப்பு

முசிறி: முசிறியில் பூட்டியிருந்த கடையின் பூட்டை உடைத்து ரூ.2.35லட்சம் ரொக்கப் பணத்தை ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் முசிறியில் துறையூர் செல்லும்ரோட்டில் ஆன்லைன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யும் பிரபலமான கடை உள்ளது. பொதுமக்கள் இந்நிறுவனத்தின் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்கும் பொருட்கள் முசிறிக்கு வந்து பின்னர் வாடிக்கையாளர்கள் கூறியுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த டெலிவரி மையத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை அந்நிறுவன கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து இருப்பதாக மேனேஜருக்கு தகவல் சென்றது.

இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.2.35 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அந்நிறுவன டெலிவரி மைய மேலாளர் மணிகண்டசாமி முசிறி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விதுன்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 2 மணியளவில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் டெலிவரிக்காக வைத்திருந்த பொருட்கள் எதையும் எடுக்காமல், பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: