எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.! அதிபர் கோத்தபய பதவி தப்பியது: இலங்கையில் பரபரப்பு

கொழும்பு:  இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடந்த போராட்டம் மற்றும் வன்முறையால் கடந்த 9ம் தேதி மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், நாட்டை ஆட்டி படைக்கும் உச்சப்பட்ச அதிகாரத்தை கையில் வைத்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றம் கூடிய போது, அதிபர் கோத்தபய மீது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா, முக்கிய தமிழர் கட்சியான டிஎன்ஏ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) ஆகியவை தனித்தனியே நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. இவற்றின் மீது மே 17ம் தேதி விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பின், முதன் முறையாக நாடாளுமன்றம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதுமே அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. அதில், தீர்மானத்தை ஆதரித்து 68 எம்பி.க்களும், எதிர்த்து 119 எம்பி.க்களும் வாக்கு அளித்தனர். இதன் மூலம், கோத்தபயவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அவருடைய பதவிக்கு வந்த ஆபத்து நீங்கியது.

Related Stories: