அதிமுகவை கபளீகரம் செய்யும் பாஜ கட்சியை காப்பாற்ற கிராமம் கிராமமாக செல்ல எடப்பாடி முடிவு

சென்னை: அதிமுக கட்சியின் நிர்வாகிகளை கொஞ்சம், கொஞ்சமாக தன் பக்கம் பாஜக இழுத்து வரும் நிலையில் கட்சியை பலப்படுத்த கிராமம் கிராமமாக செல்ல எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிமுக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரு நாட்களாக சேலத்தில் தனது வீட்டில் முகாமிட்டுள்ளார். அவரது பிறந்த நாள் முதல் அங்கு தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருக்கு வாழ்த்துச் சொல்ல வரும் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது கட்சியைப் பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் கருத்துக்களை கேட்டு வருகிறார். மேலும், மாநிலங்களவை வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்றும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதோடு நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் கல்குவாரி விபத்து, பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் 2 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக பாஜகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை கரைக்கும் வேலையில் பாஜ இறங்கியுள்ளது. இது அதிமுக தலைவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் அவர் அதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது அவரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவும் எடப்பாடி திட்டமிட்டு அதற்காக அனுமதி கேட்டுள்ளார்.

Related Stories: