அமிர்தசரஸ்: குறிப்பிட்ட சமூகத்தினரின் தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகை பாரதி சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தி தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகை பாரதி சிங், சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், சீக்கியர்களின் தாடி - மீசை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அமிர்தசரஸ் சீக்கிய அமைப்புகள் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தன. அதையடுத்து பாரதி சிங் மீது ஐபிசியின் 295-ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பாரதி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.