டெல்லி திகார் சிறை எண்: 6ல் அடைக்கப்பட்டிருக்கும் காதலியை சந்திக்க முடியாமல் 19 நாளாக சிறையில் பட்டினியாக கிடக்கும் சுகேஷ்: கெடுபிடி அதிகமானதால் ஜாலியாக இருந்த சிறை நரகமானது

புதுடெல்லி: டெல்லி திகார் சிறை எண்: 6ல் அடைக்கப்பட்டிருக்கும் காதலியை சந்திக்க முடியாமல் 19 நாளாக சிறையில் சுகேஷ் சந்திரசேகர் பட்டினியாக கிடப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்புக்கு பெற்றுத்தர இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் மீது பல பண மோசடி வழக்குகள் உள்ளன. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது, தொழில் அதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மோசடி மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, சிறையிலும் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததும் அம்பலமானது. இவ்விவகாரத்தில் சிறைத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரின் மற்றொரு விவகாரம் வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இதுவரை 19 நாட்களாக பட்டினியாக இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறின. இதுகுறித்து திகார் சிறைத்துறை வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘சிறையில் உண்ணாவிரதம் இருந்துவரும் சுகேஷ் சந்திரசேகர், ஒரு சில நாட்கள் மட்டுமே திரவ உணவை எடுத்துக் கொண்டார். அவரது காதலியும் நடிகையுமான லீனா மரியா பாலும் திகார் சிறையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க முடியாததால், சுகேஷ் சந்திரசேகர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த ஏப்ரல் முதல் சிறை எண் 1ல் சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மாதம் 23ம் தேதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.  

ஆரம்பத்தில், ஏப்ரல் 23 முதல் மே 2 வரை உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டார். பின்னர் ஒரு நாள் கழித்து மே 4 முதல் மே 12 வரை மீண்டும்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில், அவருக்கு குளுக்கோஸ்  மற்றும் பிற மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் இன்னும் சாப்பிடவில்லை.  இவரது உண்ணாவிரத போராட்ட விவகாரம் முழுவதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் இருந்து பெங்களூரு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவரது எடையும் சுமார் ஐந்து கிலோ  வரை குறைந்துள்ளது. அதனால் அவரை 24 மணி நேரமும்  கண்காணித்து வருகிறோம். அவர் தனது காதலி லீனா மரியா பாலை, மாதத்திற்கு இரண்டு முறைக்கு மேல் சந்திக்க  விரும்புகிறார்; சிறை விதிகளின் அவ்வாறு சந்திக்க ஏற்பாடு செய்ய முடியாது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இதுகுறித்து திகார் சிறை அதிகாரி சந்தீப் கோயலை தொடர்பு கொண்டபோது, ​​‘சுகேஷ் சந்திரசேகர் கடந்த சில நாட்களாக சாப்பிடவில்லை என்பது உண்மைதான். அவர் உணவை சாப்பிட மறுப்பதற்கு முக்கிய காரணம், திகார் சிறை எண் 6ல் அடைக்கப்பட்டிருக்கும் அவரது காதலி லீனா மரியா பாலை சந்திக்க வேண்டும் என்பதுதான். ஆனால் சிறை விதிகளின்படி அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியாது’ என்றார். ஏற்கனவே லஞ்சம் கொடுத்து திகார் சிறை அதிகாரிகளை வளைத்து போட்டு ஜாலியாக இருந்த சுகேஷ் சந்திர சேகர், தற்போதுள்ள சிறை அதிகாரிகளின் கெடுபிடியால் காதலியை சந்திக்க முடியாமல் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: