ஊட்டி: ஊட்டியில் கனமழை பெய்தது. இதனால் அரசு தாவரவியல் பூங்கா சேறும், சகதியுமாக மாறியது. சுற்றுலா பயணிகள் அமர இடமில்லாமல் அவதிப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக ஊட்டியில் மேக மூட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் எந்நேரமும் குளிர்ச்சியான கால நிலை நிலவுகிறது. நேற்றும் காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால், ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம் மற்றும் பைக்காரா போன்ற பகுதிகளில் பகல் நேரங்களிலேயே கடுங்குளிர் நிலவியது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். பிற்பகலுக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. கன மழையால் சிறிது நேரம் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழையால் தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறியது. இதனால், சுற்றுலா பயணிகள் அமருவதற்குகூட இடமின்றி தவித்தனர்.