மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று மும்பையை வீழ்த்தி ஐதராபாத் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முனைப்பாக உள்ளது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. முதல் 2 லீக் போட்டிகளில் தோல்வியடைந்த அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்தது. அதே நேரத்தில் கடைசி 5 ஆட்டங்களில் (குஜராத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா) தொடர் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் வாழ்வா-சாவா என்ற நிலையில் ஐதராபாத் அணி இன்று மும்பையுடன் மோதுகிறது. இதில் வெற்றிபெறாவிட்டால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறமுடியாது. ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (374 ரன்), மார்க்ராம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோரும் பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், உம்ராக் மாலிக், நடராஜன், மார்கோஜேன்சனும் வலுசேர்க்கிறார்கள். இருப்பினும் கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 40 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த போட்டியில் கவனமாக பந்துவீசுவது அவசியமானதாகும்.