கார்கிவிலிருந்து ரஷ்ய படை விரட்டியடிப்பு; போரில் உக்ரைன் கை ஓங்குகிறது: டான்பாஸையும் மீட்க தீவிர சண்டை

கீவ்: உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ்வில் இருந்து ரஷ்ய படைகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளன. இதே போல கிழக்கு உக்ரைனான டான்பாஸையும் மீட்க உக்ரைன் சண்டையை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரில் உக்ரைன் கை ஓங்கி இருக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதை எதிர்த்து அந்நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யா 3வது மாதமாக சண்டையிட்டு வருகிறது. மரியுபோல், கார்கிவ் நகரங்களையும், தலைநகர் கீவ்வின் புறநகர்களையும் சர்வ நாசமாக்கிய ரஷ்ய படை தற்போது போரில் தொய்வடைந்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றன. நேட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தற்போது போரில் உக்ரைனின் கை ஓங்கி உள்ளது. நீண்ட சண்டைக்குப் பிறகு நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ்வில் இருந்து ரஷ்ய படைகளை உக்ரைன் விரட்டி அடித்துள்ளது. உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் எல்லை வரை ரஷ்ய படையினரை பின்னுக்கு தள்ளியிருப்பதாக பிராந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும், கார்கிவ்வின் அடையாளம் தெரியாத பகுதியில் உக்ரைன் ராணுவ வீரர்கள் டேங்கிகளில் வலம் வருவது போன்ற வீடியோவை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக கார்கிவ் பெருமளவு போர் ஓய்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கார்கிவ்வின் இசூம் பகுதியில் மட்டும் ரஷ்யா தனது நிலையை தக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல மரியுபோலில் உள்ள இரும்பு ஆலையில் இன்னும் தொடர்ந்து சண்டை நடக்கிறது. அங்கு பதுங்கி உள்ள உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதிலடி தந்து வருகின்றனர்.

2 மாதமாக நடந்துள்ள போரில் தற்போது வடகிழக்கு பகுதிகளை உக்ரைன் மீண்டும் வசப்படுத்தி உள்ளது. கிழக்கு உக்ரைனான டான்பாஸில் தொடர்ந்து சண்டை தீவிரமாக இருக்கிறது. இப்பகுதியை தக்க வைக்க ரஷ்ய படை பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்பு, மருத்துவமனை, ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுகளை வீசி வருகிறது. ஏற்கனவே தலைநகர் கீவ், கார்கிவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதால், டான்பாஸை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது ரஷ்யாவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இதற்கிடையே, டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ உரையில், ‘‘கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க தயாராகி வருகிறோம். ரஷ்யாவின் புதிய தாக்குதலை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகி வருகிறோம். ஆக்கிரமிப்பாளர்கள் இறுதி கட்டத்தில் இருப்பதை இன்னும் ஏற்கவில்லை’’ என்று கூறி உள்ளார். இப்போர் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும், உக்ரைன் வெற்றி பெறும் என்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் உளவுப்பிரிவுகள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்து, சுவீடனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

உக்ரைனைப் போல பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் பின்லாந்து நாடு நேட்டோவில் இணைய விண்ணப்பிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் துணை வெளியுறவு செயலாளர் செர்ஜி ரியாப்கோப் நேற்று தனது பேட்டியில், ‘‘இது மற்றொரு மிகப்பெரிய தவறாகும். இது ராணுவ பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்’’ என எச்சரித்துள்ளார்.

புடினுக்கு ரத்த புற்றுநோய்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீப நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கம்பீரமின்றி சோர்ந்து காணப்படுகிறார். அவருக்கு உடல் பாதிப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், புடினுக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து உளவாளி கிறிஸ்டோபர் ஸ்டீல், ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். மேலும், புடினை ஆட்சியில் இருந்து அகற்ற ரஷ்யாவில் சதித்திட்டங்கள் நடப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்றும் உக்ரைன் நாட்டு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் போருக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பிரபல உணவகமான மெக் டொனல்ட்ஸ் ரஷ்யாவில் தனது தொழிலை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

Related Stories: