லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சு வீண் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம்

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் 17 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. வார்னர், சர்பராஸ் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். லிவிங்ஸ்டன் வீசிய முதல் பந்திலேயே வார்னர் டக் அவுட்டாகி வெளியேற டெல்லி கேப்பிடல்சுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து சர்பராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் இணைந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. சர்பராஸ் 32 ரன் (16 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் ராகுல் சாஹர் வசம் பிடிபட்டார். அடுத்து மார்ஷ் - லலித் யாதவ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தது. லலித் யாதவ் 24 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் பன்ட் 7 ரன், பாவெல் 2 ரன் எடுத்து லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, டெல்லி 112 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய மார்ஷ் அரை சதம் அடித்தார். அவர் 63 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் ரிஷியிடம் பிடிபட்டார். ஷர்துல் 3 ரன்னில் வெளியேற, டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. அக்சர் 17 ரன், குல்தீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் லிவிங்ஸ்டன், அர்ஷ்தீப் தலா 3 விக்கெட், ரபாடா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து, 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜிதேஷ் சர்மா அதிகபட்சமாக 44 ரன் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஜோனி பேர்ஸ்டோ 28 ரன், ராகுல் சாஹர் 25 ரன் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் ஷ்ர்துல் தாகூர்  4 விக்கெட், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டெல்லி அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Related Stories: